வெள்ளி, 29 டிசம்பர், 2017

என் அறைத் தோழர்கள்



வயதாகி
வேண்டும் போதன்றி
வேறு போதுகளில்
ஞானியாய் வாய்மூடி
மௌனித்திருக்கும் பீரோ -.

இயல்பாய்த்
திறந்த வாய் மூடாத
காலி அலமாரி –

அடிக்கடி ஆட்டம் காட்டி
அச்சுறுத்தும் மேஜை –

அமரும் போது
தரையில்
விழத்தள்ளி
விலகிச் சிரிக்கும் நாற்காலி –

காலம் கரைவதைக் காட்டி
தினம் என் வேலையில்
வேகம் கூட்டும் கடிகாரம் –

இவை என்
அறைத் தோழர்கள்.


தீபம். ஏப்ரல் – மே 1986.

மதுரைக் கல்லூரி (தன்னாட்சி)- இளங்கலை பாடப்பகுதி- தற்காலக் கவிதைகள். 1994-95. 

திங்கள், 11 டிசம்பர், 2017

பாரதியார்



82க்குப் பின்,
விழாக்கள் இனி
வேண்டாம் என்று விடப்பட்டு,
வெறும்
பள்ளிப்  புத்தகத்துப்
 பாடமாகி,
பரீட்சைத் தாள்களில்
விடை தெரியாத வினாக்களாகி
விடப்பட்டு,
அடக்கம் செய்யப்பட்டுப் போன
அமர கவி.

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

சேரியில் குடியரசு தினம்


உயரே ஏற்றிய
புதுக்கொடி
காற்றில் பறந்தது.

தலைவரோ
மாலையுடன் 
காரில் பறந்தார்.

ஓட்டளித்து அவரை
உயரே ஏற்றிய 
அவர்கள் மட்டும்
நிலையாய்
அரையில்
அழுக்குக் கந்தலோடு
கீழே.

(1984)