சனி, 30 மே, 2026

வாசித்தல்


(ஆசிரியத்துறை)

 

புத்தகம் ஒன்றைப்

புரிதலோடு அனுகுதல் வாசித்தல்.

அறிவுப் பசிக்கு

அதுதரும் உணவை யாசித்தல்.

 

தன்முனைக் கவிதை. சமூகச் சூழல். வரிக்கு 2 அல்லது 3 சொற்கள். 4 வரிகள். 2ஆவது வரி பொருள் முடிவு. பிற்பகுதி; ஒட்டியோ வெட்டியோ அமையும்படி எழுதியது..

முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- பதிவு 11.2.2025._வெற்றியாளர்  தேர்வு பெற்றது.

சனி, 23 மே, 2026

கார் பைக் ஆட்டோ சைக்கிள்

 

காரிருளில் குப்பைக்குள் 

கையோட்ட மாட்டோமால்

நாறும் கசடொழிய 

நம்நெஞ்சைக் கிள்ளிக்

களைவதற்கோ ராசையிலை 

கற்றிலமே கண்டு

விளைவதனை யஞ்சுதல் வீண்

 

சந்தவசந்த முகநூல் குழுமத்தில் எழுதிய இன்னிசை வெண்பா. 22.2.2021

செவ்வாய், 19 மே, 2026

திருவிழா

 

திருவிழா நகரினில் தோரணத் தெருக்கள்./

தெருக்களில் உலவுவோர் திரளென இருப்பர்./

இருப்பவர் அருந்துவர் அறுசுவை விருந்து./

விருந்தொடு நிறைவுறும் ஊர்த்திரு விழாவே.


அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

படக் காட்சியை ஒட்டிய கலி விருத்தம்.

விளம் விளம் விளம் மா  1.2.2025


எண்ணமே ஏற்றம்

 

சிந்தை ஆசையோடு கூடி முயங்கியதில்/

எண்ணங்கள், வெறும் பிண்டங்களாய்ப் பிறந்தன./

சேர்த்து வளர்த்தெடுக்க முயற்சி முன்வந்தது./

ஆசையின் தூண்டலால், ஏற்றிவிடும் ஏணியாய்/

உழைப்பும் உவப்புடன் துணை நின்றதால்,/

தடைகளைக் கடந்து பிண்டநிலை மாறி, /

எண்ணம், செயலாகி எழிலுடன்/

எழுந்து நின்று, ஏற்றம் பெற்றது.


அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை முகநூல் பதிவு

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

முயற்சி

 

முயற்சி தொடக்கமே. ஆயின் முடிவு?

முடிவும் அதுவெனில் யாதுள ஆக்கம்?

ஆக்கம் நிகழ அவசியம் செய்திறன்.

செய்திறன் இல்லையேல் சாகும் முயற்சியே


அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல்

முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி 3.1.2025

 காட்சிப் படத்துக்கு

வண்ணத் தூரிகை


வண்ணத் தமிழ்ந்து

வரைதிரை படிந்து

எண்ணத் துள்ளதை

எழிலொடு எழுத

இன்னொரு கையே

தூரிகை ஆமே.


அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல்

 காட்சிப் படத்துக்கு 7.1.2025

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா




சனி, 28 பிப்ரவரி, 2026

என்னுள் நிலைத்த எழில் முகம்

 

மண்ணில் இன்னலுறும் மாந்தரெலாம் மேன்மையுற

கன்னற் றமிழதனிற் கவிபொழிந்த பாரதியின்

மின்னும் விழிகளொடும் மீசையொடும் பாகையொடும்

என்னுள் நிலைத்த எழில்முகத்திற் கீடேது?

    இலக்கியச்சோலை டிசம்பர் 2024 இதழில் வெளியானது.  இரண்டாம் பரிசு பெற்றது.