சனி, 28 பிப்ரவரி, 2026

என்னுள் நிலைத்த எழில் முகம்

 

மண்ணில் இன்னலுறும் மாந்தரெலாம் மேன்மையுற

கன்னற் றமிழதனிற் கவிபொழிந்த பாரதியின்

மின்னும் விழிகளொடும் மீசையொடும் பாகையொடும்

என்னுள் நிலைத்த எழில்முகத்திற் கீடேது?

    இலக்கியச்சோலை டிசம்பர் 2024 இதழில் வெளியானது.  இரண்டாம் பரிசு பெற்றது.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

பூக்களின் புனிதம்

 

கோனுக் குளது குடிகட் கில்லையாய்ப்

பூணும் வேடப் புன்மைகள் இலையால்

சாவு வேறுள சடங்குகள் இவையெனப்

பூவது எதையுமே பழித்திடாப் பொதுமையால்

இதழ்களை விரித்து இன்முகம் மலர்த்தி

புதுமணம் பரப்பும் பூவெலாம் புனிதமே.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- முகநூல் 25.1.2025.

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா

உதிரும் சருகு


 

கிளையினிற் பொலிவுடன் இருக்கும் போதே

‘இலை’யென் றீரே!  ஏனென அறியேன்.

உதிர்கிறேன். இழந்துயிர் இலையென் றானபின்

எதுசொலி அழைத்து என்னவாம் எனக்கே?

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா


சனி, 22 நவம்பர், 2025

வள்ளுவம்

வள்ளுவம் மறையே. வாழ்க்கையின் நெறிநூல்.

நெறிநூல் யாவினும் நெடுநாள் முன்னது.

முன்னதாய்ப் பிறந்த முப்பால் ஈரடி.

ஈரடி அளிக்கும் இன்பம் வள்ளுவமே.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா 18.1.2025

மரியாதை

 

 

மரியாதை வயதளவில் மூத்தோரைப் பணிந்தொழுகல்

பணிந்தொழுகல் உளதாயின் பண்புடைமை உறவறியும்

உறவறியும் முன்னரதை ஊரறிந்து போற்றவரும்

போற்றவரும் பெருநிதியம் பெறுகின்ற மரியாதை.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

படக் காட்சியை ஒட்டிய பிரிந்திசை துள்ளல் ஓசையுடைய

தரவு கொச்சகக் கலிப்பா 11.1.2025

வியாழன், 24 ஏப்ரல், 2025

அவசரம்

 


கட்டிக் கொண்டவன்

கவலையற்று

வெட்டியாய்க்

கள்ளுக் கடையில் காலந்தள்ள,

விட்டுச்செல்ல வழியின்றி

வேலைக்குப் போகும் போதும்

கட்டுத் துணியுடன்

முதுகில் குழந்தை.

 

கை பிடித்து நடக்கவே

இன்னும்

காலம் உண்டு.

காற்செருப்புக்கு அவசரம் ஏன்?

 

அப்பனைப் போல் ஆகிவிடாமல்

ஆகாத காலத்துக்கு,

எனக்கு

அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற

உழைத்துச் சம்பாதிக்க

உருப்படியாய் வளரவேணும்

அவசரமாய் ....

 

வல்லமை மின்னிதழ் புகைப்படத்துக்கான கவிதை 16.6.2018

ஞாயிறு, 24 நவம்பர், 2024

பூவும் பூச்சியும்

 


பட்டாம் பூச்சி பறந்து வந்து

செடியில் அமர்ந்தது.— அது

பார்க்கும் போது பூவைப் போல

அழகாய் இருந்தது.

 

தொட்டுப் பார்க்க எண்ணிக் கையைத்

தூக்கி நெருங்குமுன் – அது

பட்டுச் சிறகு இதழை விரித்துப்

பறந்து போனது.

 

பூ இதழ் போலச் சிறகுகள் என்றால்

பூச்சி வாடிப் போய்விடுமோ?

பூவும் தனது இதழை விரித்துப்

பறந்து ஓடிப் போய் விடுமோ?

 

எட்ட இருந்து பார்க்கும் போது

இரண்டும் ஒன்றாய் இருந்தாலும்,

பட்டாம் பூச்சி வாடாது.

பறக்கும் பூவும் கிடையாது.

 

பாரதி கலைக்கழகம், அழ.வள்ளியப்பா நினைவரங்கம்.