சனி, 22 நவம்பர், 2025

வள்ளுவம்

வள்ளுவம் மறையே. வாழ்க்கையின் நெறிநூல்.

நெறிநூல் யாவினும் நெடுநாள் முன்னது.

முன்னதாய்ப் பிறந்த முப்பால் ஈரடி.

ஈரடி அளிக்கும் இன்பம் வள்ளுவமே.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா 18.1.2025

மரியாதை

 

 

மரியாதை வயதளவில் மூத்தோரைப் பணிந்தொழுகல்

பணிந்தொழுகல் உளதாயின் பண்புடைமை உறவறியும்

உறவறியும் முன்னரதை ஊரறிந்து போற்றவரும்

போற்றவரும் பெருநிதியம் பெறுகின்ற மரியாதை.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

படக் காட்சியை ஒட்டிய பிரிந்திசை துள்ளல் ஓசையுடைய

தரவு கொச்சகக் கலிப்பா 11.1.2025

வியாழன், 24 ஏப்ரல், 2025

அவசரம்

 


கட்டிக் கொண்டவன்

கவலையற்று

வெட்டியாய்க்

கள்ளுக் கடையில் காலந்தள்ள,

விட்டுச்செல்ல வழியின்றி

வேலைக்குப் போகும் போதும்

கட்டுத் துணியுடன்

முதுகில் குழந்தை.

 

கை பிடித்து நடக்கவே

இன்னும்

காலம் உண்டு.

காற்செருப்புக்கு அவசரம் ஏன்?

 

அப்பனைப் போல் ஆகிவிடாமல்

ஆகாத காலத்துக்கு,

எனக்கு

அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற

உழைத்துச் சம்பாதிக்க

உருப்படியாய் வளரவேணும்

அவசரமாய் ....

 

வல்லமை மின்னிதழ் புகைப்படத்துக்கான கவிதை 16.6.2018

ஞாயிறு, 24 நவம்பர், 2024

பூவும் பூச்சியும்

 


பட்டாம் பூச்சி பறந்து வந்து

செடியில் அமர்ந்தது.— அது

பார்க்கும் போது பூவைப் போல

அழகாய் இருந்தது.

 

தொட்டுப் பார்க்க எண்ணிக் கையைத்

தூக்கி நெருங்குமுன் – அது

பட்டுச் சிறகு இதழை விரித்துப்

பறந்து போனது.

 

பூ இதழ் போலச் சிறகுகள் என்றால்

பூச்சி வாடிப் போய்விடுமோ?

பூவும் தனது இதழை விரித்துப்

பறந்து ஓடிப் போய் விடுமோ?

 

எட்ட இருந்து பார்க்கும் போது

இரண்டும் ஒன்றாய் இருந்தாலும்,

பட்டாம் பூச்சி வாடாது.

பறக்கும் பூவும் கிடையாது.

 

பாரதி கலைக்கழகம், அழ.வள்ளியப்பா நினைவரங்கம்.

திங்கள், 28 அக்டோபர், 2024

நாளை வரும்

 


 

எழுதாமல்

பக்க நினைவுக்காக

மூடிய பதிவேட்டில்

முடங்கும் பேனா.

 

கணக்கிடாமல்

காற்று தூக்காதிருக்கக்

காகிதக் கணமாய் அமர்ந்திருக்கும்

கால்க்குலேட்டர்.

 

காலி நாற்காலிக்குக்

காற்று வீசும்

மின் விசிறி.

 

அவசரம் பற்றி

அறியாத காகிதங்கள்

அட்டைக் கட்டுக்குள்

அடக்கமாய் உறங்கும்.

 

நடைத்தவம் புரிந்த

 எனக்கு

‘நாளை வரும்’ என்று

வரம் கிடைக்கும்.

 

‘நாளை’ நிச்சயம் வரும்.

 

Tamilauthors.com 10.9.2013

வெள்ளி, 7 மே, 2021

முதிர்வு முன்வந்து நின்றபோது

 


 

ஈரத் தளத்தில்

பாவி நடக்கப்

பயங் கொள்ளும் பாதங்கள்.

 

படி கண்டு தயங்கி,

மடித்து

ஏற மறுக்கும் கால்கள்.

 

விளக்கு அணைத்ததும்

வீடு பூட்டியதும்

உறுதிப்படுத்திக் கொண்டதும் மறந்து,

மறந்து விட்டோமோ என்று

பல சமயங்களில்

பதைபதைக்கும் மனது.

 

காலச்சுழலில் நழுவிய  இளமையைக்

கண்ணாடியில் தேடும் முகம்.

 

கருமை தொலைத்த

தலைமுடி தோன்றி’

முதுமை காட்டி நகைக்கும்..

 

Tamilauthors.com Minnithazh Sep. 2013

வெள்ளி, 6 நவம்பர், 2020

விவாதம்

ஒரு முடிவு தேடுவதற்கான 
தொடக்கமே 
முடிவைத் தேடிக்கொண்டது. 

 ஏ.சி. குளுமையில்
 கையைச் சுட்டது 
கா(ப்)பிக் குவளை. 

 பேசிய பின்
 கூடி இருந்தவர்கள் 
கலைந்து போனார்கள்.


மனித நேயம் ஜூலை 2006